Monday, April 28, 2008

நானும் எனது சிங்கமும் :

எனது சிங்கத்தினைப் பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்களாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன் , ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது . இந்த வாரமோ அடுத்த வாரமோ அது என்னை விட்டு பிரிந்து சென்றுவிடும் . அதற்கு முன்பாகவே எனது எண்ணங்களை பதிவு செய்யாவிடின் , அது என்றென்றைக்குமாய் முடியாமலே போய்விடுமோ என்ற கவலையின் வெளிப்பாடே இது !!

சென்ற வார விகடனில் வந்த ஒரு சிறுகதையில் , தனக்கு சீதனமாய்க் கிடைத்த " லம்பாற்டா " ஸ்கூட்டரினைப் பற்றி ஏ. ஹென்றி ( என்றுதான் நினைக்கிறேன் .. சரிபார்த்து எழுத முடியவில்லை (இப்பொழுதேல்லாம் என்னிடம் இருந்து இரவல் வாங்கிய விகடனையும் , இந்தியா டுடேயினையும் திருப்பிக் கொடுக்கும் பழக்கம் , எனது அபுதாபி நண்பர்களிடம் ( ?? ) ,அறவே நின்று போய் விட்டது !!! ) எ(அ)ழுதியிருந்தார் . சீதனமாய்க் கிடைத்த வண்டிக்கே , இப்படி என்றால் , தனது சம்பளத்தில் முதலில் வாங்கிய பொருளேன்றால் ???? ...

எனக்கும் ’ எனது சிங்கம் ’ என செல்லமாய் நான் அழைக்கும் எனது , Herohonda CD100 tn59b2535 க்குமான உறவு , மனிதர் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சாதாரணமான உறவுதான். பழைய விட்டாலாச்சாரியா படங்களில் வருவது போல , வில்ல அசுரனின் உயிர் , ஏழு மலை , ஏழு கடல் தாண்டி , பத்துதலை பாம்பு காவல் காக்கும் , கொதிக்கும் நீர்நிலையில் நேர் மேலே இருக்கும் , அடைக்கப் பட்டிருக்கும் கூண்டுக்குள் இருக்கும் ஒரு கிளியிடம் இருக்கும் . வழக்கம் போல ஹீரோ , எல்லா ஆபத்துகளையும் கடந்து , அக்கிளியின் கழுத்தைத் திருகி கொல்வார் . ஆனால் எனது இந்தக் கதை , அப்படிப்பட்டது அல்ல !!! வீட்டிலும் ஆபீஸிலும் இருக்கும் நேரங்களைக் காட்டிலும் , நானும் எனது சிங்கமும் தான் ஒன்றாய் இருப்போம் என்றாலும் கூட , எனது " உயிர் " என்று சொல்லும் அளவிற்கு அல்ல , நானும் எனது சிங்கமும் !! ஆனாலும் ஏதோ , பெயரிடப் பட முடியாத உறவும் புரிதலும் இருந்தது எங்களுக்குள் !!!

நானும் எனது சிங்கமும் இணைவதற்கான நிச்சயம் , நான் பிலிப்ஸில் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாள் எந்தவித முன்னறிவிப்போ , புரோகிதரோ , புகையோ இல்லாமலே நடந்து முடிந்தது . அன்று எனது மானேஜர் என்னிடம் , நான் உடனே மதுரை செல்லவேண்டும் எனவும் , அவர் அதற்கு அடுத்த நாள் மதுரை வருவதாகவும் கூறினார் . நானும் உடனே " சரி சார் , அப்போ நான் போய் , டாக்ஸி புக் பண்றேன் சார் , நம்ம மார்க்கெட் போறதுக்கு ஈஸியா இருக்கும் என்றேன் " . சற்று நேரம் அமைதியாக இருந்தவர் " வேண்டாம் குமார் , நம்ம உன் வண்டியிலயே போய்டுவோம் , உன்கிட்ட வண்டி இருக்குல்ல ??? " என்றார் . ஏற்கனவே இண்டர்வியூவில் , வண்டியோட்ட தெரியும் எனவும் , வண்டி இருக்கிறது என்று பொய் சொல்லியிருந்ததினாலும் , வேறு வழியில்லாமல் " இருக்கு சார் , யமகா ( அப்பொழுது எனக்கு தெரிந்திருந்த ஒரே பைக்கின் பெயர் ) " என்றேன் . ஆக நிச்சயம் முடிந்தது , மணமகள் யாரேன்று தெரியாமலே !!

இரண்டு நாட்களில் , இருக்கும் பத்தாயிரத்தைக் கொண்டு பைக் வாங்குவது ஒன்றும் ஓகேனக்கல் திட்டத்தினை நிறைவேற்றும் அளவிற்க்கு கஶ்டமான காரியம் இல்லை . ஆனால் , அந்த இரண்டு நாட்களுக்குள் வண்டியோட்டவும் கற்றுக் கொள்ள வேண்டும் , அதுவும் மானேஜரை பின்னால் வைத்துக் கொண்டு டபுள்ஸ் அடிக்கும் அளவிற்க்கு தேர்ச்சியாக !!. ஆனாலும் செய்தாக வேண்டும் , வேறு வழி ???

மதுரை சென்றவுடன் , தெரிந்த உறவுக்காரர் ஒருவரிடம் எனக்கு ஒரு வண்டி வேண்டும் எனவும் , அதுவும் நாளைக்குள் வேண்டும் எனவும் கூறினேன் . அடுத்த நாள் நானும் எனது மாமாவும் அவருக்குப் பரிச்சயமான ஒரு மெக்கானிக்கிடம் போனோம் . அவரும் இரண்டு வண்டி இருக்கிறது என்றும் , ஆனாலும் இரண்டிலும் வேலை இருக்கிறதென்றும் , நான்கு நாள் கழித்து தான் வண்டி கிடைக்கும் எனவும் கூறினார் .முதலில் ஐயாயிரமும் , வண்டி எடுக்கும் பொழுது மீதி நாலாயிரமும் தருவது என்றும் , வண்டி ரிப்பேராகி எங்கேயாவது நின்று விட்டால் , அந்த இடத்திற்கு வந்து சரிபண்ணித் தருவது என்று எங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் கையெழுத்தானது . அணு ஒப்பந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லாததால் , பார்லிமண்ட் ( அப்பா???) ஒப்புதல் இல்லாமலே ஏகமனதாய் நிறைவேறியது . எனது நிலைமையினை அவரிடம் கூறி, அடுத்த நாள் ஒரு அரைமணி நேரத்திற்கு , ஏதாவது ஒரு யமஹா வண்டியினை " ஹோட்டல் கீரின் கேட் " பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும் எனவும் , சாவியினை என்னிடம் கொடுத்துவிட்டு , பத்து பதினைந்து நிமிடத்தில் நான் சொல்லும் ரூமிற்கு வந்தால் , சாவியினைத் தருவதாகவும் கூறி , ஒரு வழியாக சமாளித்தேன் . மானேஜரும் வந்தார் . எனது பைக் ரிப்பேர் எனவும் , அதனால் மெக்கானிக்கிடம் சொல்லியிருக்கிறேன் எனவும் , அவன் வந்து சாவி வாங்கிச் செல்வான் எனவும் கூறி சமாளிக்க , மானேஜருக்கு எவ்வித சந்தேகமும் வராமல் , காரியம் முடிந்தது .

நாலாவது நாளும் வந்தது , நானும் எனது சிங்கமும் இணையும் நாள் . இனம் புரியா மகிழ்ச்சியுடனும் , ஒரு வித கலக்கத்தோடும் மெக்கானிக்கிடம் சென்றேன் . வண்டி ரெடி என்றார் . "ஓட்டிப் பாருங்க , சார் " , என்று சொல்லி திருத்திக் கொண்டு , " யார் சார் , வண்டி எடுத்துட்டுப் போறது ? " , என்றார் . உடன் வந்த எனது நண்பனைக் கை காண்பித்தேன் . வண்டியினைப் பார்த்தேன் . எனது உயரத்திற்கு ஏற்றவாறும் , சிவந்த உடம்பும் , அதனை முழுதும் மறைத்தும் மறைக்காமலும் சுற்றப்பட்டிருந்த கறுப்புத் துணியும் , அன்று துடைத்து பளபளவென ஆக்கப்பட்டிருந்த சைலன்சரின் வெள்ளி உடம்புமாக எனது சிங்கம் காத்திருந்தது .

முதன் முதலாக எனது சிங்கத்தில் , நான் பின்னால் உட்கார்ந்து வர , பெரியார் பஸ் ஸ்டான்டில் இருந்து , ஹோட்டல் பாண்டியாஸ் வரை சென்றேன் . செல்லும் வழியிலெல்லாம் எனது நண்பன் எப்படி , எப்பொழுது கியர் மாற்றுகிறான் , எப்படி வண்டியினை கையாளுகிறான் என்றேல்லாம் கவனித்தே வந்தேன் . ஹோட்டல் பாண்டியாஸில் அவன் இறங்கிக் கொள்ள , வண்டி இப்பொழுது எனது கையில் !!! மனம் முழுதும் பயம் நிறைந்த குதூகலம் !! ஒரே கிக்கில் ஸ்டார்ட் ஆகிவிட , நிறைய ஆலோசித்து முதல் கியர் போட பின்னால் தான் கால் வைக்க வேண்டும் என கண்டுபிடித்து ,, சில நிமிடம் கழித்தே முதல் கியர் விழுந்து வண்டி முன்னால் செல்லத் தொடங்கியது .மீண்டும் சில பல ஆலோசனைகளுப்பால் இரண்டாவது கியரும் வெற்றிகரமாய் விழுந்து விட , வண்டியும் எனது மனமும் பறக்கத் தொடங்கியது . ஏதோ ஒரு கட்டத்தில் பிரேக் பிடிக்க , அத்துடன் நின்றது . பின்னர் மெக்கானிக் வந்து தான் ஸ்டார்ட் செய்ய வேண்டியிருந்தது .

முன்னரே அம்மாவிடம் வண்டி வாங்கப் போகிறேன் என்று சொல்லியிருந்ததினால் , நான் வீடு செல்லும் பொழுது , வாசலில் அம்மா , பாட்டி , இன்னும் சிலர் , அம்மா கையில் ஆரத்தித் தட்டு!!! நாளை தான் கிடைக்கும் என சொல்லி அனுப்பிவைத்தேன் . அடுத்த நாள் எவ்வித ஆரவாரமும் , ஆரத்தியும் இல்லாமலே சிங்கம் எனது வீட்டிற்கு வந்தது . ஒட்டி வந்த எனக்குத் தான் தெரியும் அதன் வலி !! காலையில் வேலையும் , மாலையில் வண்டி ஓட்டுதலுமாக நாட்கள் வாரங்கள் ஆயின . கல்யாணம் முடித்த புது மாப்பிள்ளை போல , நானும் வீட்டிற்கு சீக்கிரம் வரத் தொடங்கினேன் !!

வண்டி ஓட்ட நன்றாய் கற்றாகி விட்டது . கற்றாகிவிட்டது என கூறுவதினை விடவும் , அதன் சூட்சுமம் புரிபட தொடங்கியது என்று சொல்லுதல் சரியாய் இருக்கும் . அடுத்தாற் போல இருக்கும் மளிகைக் கடையினை விட்டு விட்டு , அடுத்த நகரில் இருக்கும் சூப்பர் மார்கெட்டில் இருந்து மளிகை வாங்கி வந்தேன் . அப்பொழுது எனது வீட்டில் தங்கியிருந்த நொட்ஸ் , காலேஜ் லீவ் சமயத்தில் மதுரை வந்த தாமோதரன் , பெங்களூரில் இருந்து லீவ்ற்கு மதுரை வந்த சிவா , பின்னர் காமராஜ் எல்லாரையும் பின்னாடி உட்கார வைத்து , என்னாலும் டபுள்ஸ் ஒட்ட முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் தான் அம்மாவை பின்னால் இருத்தி வைத்து பேங்க் வரை ஓட்டிச் சென்றேன் !!! அது ஒரு சுகானுபவம் . பயமோ அல்லது தற்காப்போ , அம்மா எனது தோள்பட்டையினை அழுந்தப் பிடித்தவாறே வர , எதோ ஒரு சாதனை நிகழ்த்திவிட்ட சந்தோசம் எனக்குள் !!! அம்மாவிற்கும் பையன் சொந்தமாக வண்டி வாங்கும் அளவிற்கு முன்னேறி?? விட்டானே என்ற பெருமிதம் இருந்திருக்க வேண்டும் !!!

வாரங்கள் மாதங்களாக , நானும் எனது சிங்கமும் ஒன்றாகிவிட்டோம் . ஆர்டர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வெறித்தனமாக ஒவர் ஸ்பீடில் ( எனது சிங்கத்தினைப் பொருந்த வரை ஐம்பது !!! ) செல்வது , கிடைக்காத விரக்தியில் மெதுவாக செல்வது , அப்பாவின் மேல் உள்ள கோபம் என எனது எல்லவற்றிலும் சிங்கம் கூட நின்று கொடுத்திருக்கிறது !!! தண்ணி அடித்துவிட்டு வண்டி ஒட்டும் சில நேரத்தில் , மக்கர் பண்ணி அதன் கோபத்தினையும் வெளிக்காட்டியிருக்கிறது !!

நான் எனது சிங்கத்தினை வாங்கிய விலைக்கிக் காட்டிலும் , அதனை பரமரிப்பத்ற்கு அதிகம் செலவாகிவிட்டிருந்த காலமாகியிருந்தது !!. வழக்கம் போல் , நண்பனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவிட்டு , திரும்புகையில் மணி பத்தேமுக்கால் . திடீரென்று சந்திரமுகி படத்திற்கு செல்லலாம் என்று வண்டியினைத் திருப்பினேன் . எதிர்பாராவிதமாக ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பாரலைக் கவனிக்காமல் விட , டமால் என்ற சத்தத்துடன் நானும் எனது சிங்கமும் சிதறினோம் !! சேலம் செல்லும் நெடுஞ்சாலை அது . இன்னும் இவ்வுலகத்தில் வாழவேண்டிய விதி இருப்பதினால் , நான் சில சிராப்புகளுடனும் , எனது சிங்கம் முன்சக்கரம் மடிந்தும் விழுந்தது . உருட்டிச் செல்லக் கூட வழியில்லை . நடுத்தரக்காரனின் மாதக்கடைசி அது . அதனால் சரிபார்க்க முடியாமலே இரு வாரம் சிங்கம் , வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்தது !! அந்த இரு வாரங்களில் நான் செய்த ஆட்டோ மற்றும் பஸ் பயணங்களும் , அதற்கான காத்திருப்பும் , சிங்கத்தின் இன்றியமையாமையினை உணரச் செய்தது !!

பின்னர் , பெங்களுரில் இருந்த இரண்டு மாதங்களும் , சிங்கம் என்னுடன் இல்லை . சென்னையில் வேலை . சில நாட்கள் கழித்து , நானும் எனது சிங்கமுமாய் , மதுரை எக்ஸ்பிரஸில் புறப்பட்டோம் . சென்னை மாநகர தெருக்களில் நானும் எனது சிங்கமும் !!! நண்பர்களின் ஓட்டுதல்களூடே , சிங்கம் சென்னை மாநகரில் உலா வரத் தொடங்கியது !!! மவுண்ட் ரோட்டிலும் , ஜெமினி மேம்பாலத்திலும் சிங்கத்தோடு முதன்முதலில் சென்றது இன்னமும் ஞாபகம் இருக்கிறது !! வரலாற்றுச் சாதனை அது .

இந்த நாட்களில் தான் , ’அல்ஜைமர்ஸ்’ வந்தாலோலிய மறக்காத சில ஞாபகங்கள் !! நானும் சுந்தரபாண்டியனும் மழையில் , அபிராமி தியேட்டர் அருகில் மாட்டியது!! அதுவரை எனது சிங்கம் சிரத்தையாக என்னையும் , சுந்தரையும் மவுண்ட்டிலிருந்து கொண்டுவந்திருந்தது , அதன் பிறகு நகலவேயில்லை !! , நானும் கூவமும் மழையில் மாட்டி , எனது சிங்கத்தினை ஒரு பெட்ரோல் பங்கில் நிப்பாட்டி , ஆட்டோவில் அயனாவரம் வந்தது , கரும்புகையினூடே நானும் வெண்மணியும் சிக்னலில் காத்திருந்தது , அதிகாலை வந்த சிவாவை மெரீனா அழைத்துச் சென்றது ....... போன்ற சில மறக்கக் கூடா ஞாபகங்கள் !!!

விரக்தியோ , வேதனையோ அல்லது போதை தந்த சுகமோ தெரியவில்லை !! யூ ஏ ஈ விசா கிடைத்த பின்னரும் , தினமும் தண்ணியடித்து விட்டு , வரும் பழக்கம் தோன்றியிருந்த நேரமது . ஆனாலும் ஒரு தடவை கூட , சிங்கம் என்னைக் கைவிடவில்லை !! எப்படி எந்த ரூட்டில் வந்தேன் எனத் தெரியாமலே , ரூம் வந்திருக்கிறேன் !!

யூ ஏ ஈ கிளம்புவதற்கு , முந்தைய நாள் , கூவத்தினை அவனது ஆபிஸில் இருந்து , விருகம்பாக்கம் கொண்டு வந்தது தான் நான் எனது சிங்கத்தில் சென்ற கடைசி சவாரி!! அது எனக்கும் தெரிந்திருந்தது !! மழைக்கால இரவில் , எவ்வித நிறுத்தலோ , தாமதமோ இல்லமலே ரூம் வந்து சேர்ந்தோம் !!ஆனாலும் எனக்குள் , ஒருவித தயக்கம் . சிங்கத்தில் நான் செய்யும் கடைசி சவாரியில் நான் மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து , "ஸ்ப்ரைட் " வாங்கி வருவதாக கூறிவிட்டு , கொட்டும் மழையில் போரூர் வரை சென்று திரும்பினேன் !! இந்த முறை மகிழ்ச்சியாய் ரூமிற்கு வந்தேன் . அதனைப் பற்றி இப்பொழுது நினைக்கும் வேளையிலும் , அதே உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது !!

இனி ஒரு தடவை எனது சிங்கத்தினை பார்ப்பேனா என்று தெரியவில்லை!! பார்த்தாலும் பழையது போல் , நானும் எனது சிங்கமும் இருப்போமா என்றும் தெரியவில்லை !! ( எல்லாம் தெரிந்துவிட்டால் , வாழ்க்கை அர்த்தமில்லாததாகிவிடும்!! ) . அஃறிணை பொருளின் மேலான எனது இந்த பற்றுதல் பைத்தியக்காரத்தனம் என்கிறான் இங்கிருக்கும் எனது நண்பன் !!! . எனது சிங்கம் அஃறிணை என்று யார் சொன்னது ??? அப்படியே இருந்தாலும் , பைத்தியக்காரணாகவே இருந்துவிட்டுப் போகிறேன் !!!

மீண்டும் வருகிறேன் !!!!

Monday, January 21, 2008

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௩ :

பணம் :

ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
காசு சம்பாதிக்கப்
போனான் கணவன்

அய்ந்து வருடமோ
ஆறு வருடமோ கழித்து வரும்
கணவனுக்காக காத்திருக்கிறாள் மனைவி

வாழ்க்கைக்கு பணம் வேண்டும்
சேர்ந்து வாழமுடியாத வாழ்க்கைக்குக்
இருந்தால் என்னஇல்லாவிட்டால் என்ன பணம் ?

படித்தவுடன் தோன்றியது சரியான கிறுக்கல் , பினாத்தல் என்று . சில நாட்கள் கழித்து யோசிக்கையில் சரிதானோ என்று தோன்றியது . இன்னும் புரிபடாத மனநிலையில் நான் .

ஏற்கனவே சொல்லியிருந்ததினைப் போல் , இங்கு நடக்கும் கட்டுமான பணியில் இருப்பவர்களில் அதிகமானோர் தமிழர்கள் . சரியாக படிக்காமல் இருந்துவிட்டதினால் , தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நூற்றியம்பது ருபாய் கிடைக்கும் . அதுவும் அன்று வேலை இருந்தால் மட்டும் . இங்கு மாதம் பதினோராயிரம் . செலவு போக மாதம் ஆறாயிரமாவது வீட்டிற்கு அனுப்பலாம் . இவர்கள் இங்கு வந்ததில் நியாயமிருக்கிறது .

எனது நிலை வேறு .பொறியியல் முடித்து விட்டு , நல்ல கம்பனியிலும் வேலை செய்துவிட்டு , நான் இங்கு வரக் காரணம் ? சமாதானம் சொல்வதேன்றால் , நான் வழிதவறிப் போன ஒரு ஆடு .பிரகாஶ்ராஜ் மேற்கோள் காட்டியிருந்ததினைப் போல , " வழிதவறிப் போகும் ஆட்டிற்கு தான் , மேய்ப்பன் தோளில் இடம் கிடைக்கும் " .. ஹிஹி ..

எதற்காக ஒருவன் வெளிநாட்டுக்கு வேலைக்காக வருகிறான் ? சரியான வேலை கிடைக்காமல் சிலர் , சம்பளம் அதிகம் வேண்டி சிலர் , தனிப்பட்ட காரணம் காரணமாக சிலர் . வீட்டிலுல்லோர் நலமும் , நிம்மதியும் தான் வேண்டும் எனக்கு . இங்கு வருவதால் , எனது வீட்டின் பணப்பிரச்சனைகள் சில குறைந்திருக்கிறது . நான் இந்தியாவில் இருந்தினைக் காட்டிலும் இப்பொழுது நலமாகவே இருக்கிறார்கள் . அவர்கள் இழந்தது என் அருகாமையினைத் தான் . அது போலவே நானும் . வீட்டு நினைப்பு தட்டும் சில நேரங்களைத் தவிர , நலமாகவே இருக்கிறேன் . வேறேன்ன வேண்டும் ? இது எனது வாதம் .

பணம் பெரிதா ? உணர்வுகள் பெரிதா ? உனது அருகாமை இல்லாமையினை , நீ வெளிநாட்டுக்குச் சென்று அனுப்பும் அதிகமான பணம் சமன் செய்து விடுமா? அம்மாவின் அன்பும் , தங்கையின் அன்பும் , வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும் , அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அந்த சில விலைமதிப்பில்லா நேரங்களையும் , நீ தனியாக இருந்து சாப்பிடும் குப்பூஸூம் ,ரொட்டியும் நெருங்க முடியுமா ? இது கவிஞரின் வாதமாக இருக்கலாம் .

அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் . எதிலோ படித்தது ஞாபகம் வருகிறது . " சரியென்றும் தவறென்றும் ஒன்றும் இல்லை . இன்று சரி என்று படுவது , நாளை தவறாகப் படலாம்". இது சரி என்று இப்பொழுது படுகிறது . தவறு என்று தோன்றும் முன்பே , காலம் தாழ்த்தாமல் இந்தியா வந்திருப்பேன் . இடைப்பட்ட காலத்தில் நான் தவற விட்டது , அதனை விட பலமடங்காக திருப்பிக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

மீண்டும் வருகிறேன் !!

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௩ :

அவசியம் :

"பசித்த வேளைக்கு
ருசியுடனோ இல்லாமலோ சாப்பாடு

அவகாசம் கிடைக்கையில்
கையிலொரு கவிதைப் புத்தகம்

அனாசினோஅல்லது ஜண்டுபாமோ
தலைவலிக்கு

தூரப் பயணத்தில் பேருந்தில்
அமர்ந்து போக ஒர் இருக்கை

ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நேரத்தில் மட்டும் அவசியம் "

உண்மையே . ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் மட்டும் தான் அவசியப்படுகிறது . மற்ற நேரங்களில் அனாவசியாமாகவோ , தொந்தரவாகவோ அமைந்துவிடுகிறது .

இப்பொதேல்லாம் காலைப் பொழுதுகளுக்கு , ஒரு கப் சுலைமானி , ஒரு சுடாகு , ஒரு சிகரட் மட்டுமே தேவையாயிருக்கிறது . வேலைப் பயணங்களில் இருக்கும் பொழுது புத்தகமும் , சாயங்கால மற்றும் இரவு நேரங்களில் இரண்டு லார்ஜும் , கம்ப்யுட்டரில் பாட்டும் இருந்துவிட்டால் , ஒரு நாளின் கணக்கு முடிந்துவிடுகிறது . இடைக்கிடைக்கு நண்பர்களின் போன்கால்கள் , வீட்டின் நலம் விசாரிப்பு இவற்றோடே கழிகிறது நாட்கள் .

இவற்றில் எது நேரம் கழித்து கிடைத்தாலும் அவசியப்படுவதில்லை . சாதாரண உண்மையினை மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் இக்கவிதை என்னவோ மனதில் குறுகுறுக்கிறது .

மீண்டும் வருகிறேன் !!

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௨ :

பாசம் :

"பட்டணத்தில் படிக்கும்
மகன் வருவானென
காத்திருந்தாள் தாய்
பல மாதங்களாக

விடுமுறை நாளில் அதிகாலை வேளை
அசதியாய் வந்தவன்
உறங்கச் சென்றான்
தூங்கட்டும் என்று
தாலாட்டினாள் தனக்குள்ளேயே

எழுந்தவன் அவசரமாய்ப் புறப்பட்டுச் சென்றான்
நண்பர்களைப் பார்க்க
திரும்பி வந்தவன் தயாரானான்
பட்டணம் புறப்பட
மீண்டும் பார்த்தபடியேயிருந்தாள் பாசத்துடன்

வாசல் வரை வந்து
வழியனுப்பினாள் ஏக்கத்துடன் "

இதனை விடவும் அழகாக தாயின் அன்பை , பாசத்தினை உணர்த்தமுடியுமா ?
வாழ்பானுவங்களில் இருந்து வருவது தான் இலக்கியம் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது . " இன்றைய இலக்கியம் என்பது வாழ்க்கையினை பிரதிபலிப்பதாயுள்ளது " என்ற ஆசிரியரின் முன்னுரைக்கேற்ப இக்கவிதை உள்ளது .

பாசம் கிடைக்கும் இடத்தில் அதனை உதாசினப்படுத்துவதும் , கிடைக்காத இடத்தினில் அதனை தேடி அலைவதாகவுமே அலைபவனாகவே நான் இருந்திருக்கிறேன் . நான் மட்டுமல்ல , நம்மில் பலரும் .

மாசுயில்லாத அன்பினை தாயிடம் தவிர வேறேங்கும் காணுதல் அரிது . கிடைக்கும் இரண்டு மாத விடுமுறையில் , அதிகமாக அம்மாவுடனே இருக்க வேண்டும் என ஏற்கனவே செய்திருந்த முடிவினை , இக்கவிதை இன்னமும் வலியுருத்துகிறது .

மீண்டும் வருகிறேன் !!

பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" ௧ :

வெண்மணி வாயிலாக பொன். குமாரின் " தன்னிடத்தை நிரப்பையுள்ளது நாற்காலி" புத்தகம் கிடைத்தது . அருமையான கவிதைகளின் தொகுப்பு . அவற்றில் , எனக்குப் பிடித்தது பின்வருவன.

மௌனி :

அதிகாலை ஆறு மணிக்கு
வீடு தேடி வந்தவர்களுக்காக
தூக்கத்தை ரத்து செய்து
எழுந்தேன் .

குளிக்கும் பொழுது
கூப்பிடும் குரல் கேட்டு
முழுமையாய் குளியாமல்
வெளியே வருகை

சாப்பிடும் வேளை சொந்தம் வர
, அரைவயிறு நிரப்பி
அவசரமாய் முடிப்பு

பேருந்தில் பக்கத்தில் அமர்ந்தவனுக்காக
உடல் கால்பாகமாய்
ஒடுக்கப்பட்டது

என் பிரச்சனைகளே என்னால் தீர்க்கப்படாத நிலையில்
, வந்தவர்கள் சிக்கல்களை கேட்க மௌனியானேன் .

எனக்காக வாழ எத்தனிக்கும் வேளையிலெல்லாம்
விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது யாருக்காகவோ

அன்றாட வாழ்வில் நடப்பவை இவை . நம்மால் நமக்கான வாழ்வினை வாழ முடியவில்லை என்பதே சரி . அப்படியே வாழ விரும்பினாலும் , அது மற்றவர்களை சார்ந்து தான் இருக்கவேண்டியுள்ளது . அப்புள்ளியில் தான் சமூகம் , சார்புநிலை என்றவை வருகின்றன
.
நாம் மற்றவர்களிடம் என்னதான் பேசுகிறோம் ? சில சமயங்களில் சகாயம் வேண்டியும் , சில சமயங்களில் சமாதானம் வேண்டியும் , பல சமயங்களில் தமது பிரச்சனை அவருக்குப் புரிய வேண்டும் என்பதற்க்காகவுமே பேசுகிறோம் . நமது பிரச்சனை மற்றவருக்கு புரிந்து என்ன பயன்? அது சில சமயம் ஒரு ஆறுதல் , சில சமயம் ஒரு தேறுதல் வேண்டி அவ்வளவுதான் .

எனினும் எனக்கான வாழ்க்கை என்பது என்ன ? என்பதே கேள்விக்குறியதாகவும் இருக்கிறது . எனது அம்மா , அப்பா , எனது தங்கை , எனது குடும்பம் , எனது நண்பர்கள் ...... இவர்கள் அல்லது இது தான் எனக்கான வாழ்வா ? தெரியவில்லை .

இதற்கான பதிலாக பொன்.குமாரின் மற்றொரு கவிதையே இருக்கிறது .

புரிதல் :

விவரம் புரியுமுன்னே
கடந்துவிட்டது
குழந்தைப்பருவம்

கவலையின்றி முடிந்தது
கல்விப்பருவம்

வேலை தேடுவதிலேயே
கழிந்தது ஒரு சில வருடங்கள்

கல்யாணத்திற்குப் பின்
தாம்பத்தியம் அறியும் முன்னரே
பிறந்தன பிள்ளைகள்

பிள்ளைகளை வளர்த்து
ஆளாக்கவே சரியாயிருந்தது மீதிக் காலம்

எந்நிலையிலும் புரியாமலே
உணர்ந்து கொள்ள முடியாமலே
முடிந்துவிட்டது வாழ்க்கை !!

இது தான் அனைத்து சாதாரணார்களுக்கும் நடப்பது . நாமும் ஒரு சாதாரணாக இருக்க வேண்டுமா , அல்லது சாதிக்க வேண்டுமா என்பதினை நாம் தான் முடிவு செய்யவேண்டும் .

மீண்டும் வருகிறேன் !!

’ அழுகிய’ தமிழ் மகன் :

அழகிய தமிழ் மகன் படம் பார்த்தேன். வித்தியாசமான படம் என்ற சாக்கில் அரதப் பழசான ஒரு மசாலாக் குப்பை !!
வழக்கம்போல ’உலகக் காதலர்களையெல்லாம் ’ சேர்த்து வைக்கும் மாமா வேலை பார்ப்பது , தங்கையினைக் கட்டிக் கொடுத்த ஊரில் உள்ள ரௌடிகளையெல்லாம் அழிப்பது, போலிஸாகி ஊரில் உள்ள ரௌடிகளையெல்லாம் கொன்று குவிப்பது போன்ற வழக்கமான கதையினை விட்டு விட்டு , புதியதாக ஒரு கதையினை பரீட்சித்திப் பார்த்திருக்கும் விஜய்க்கு மட்டுமல்ல , விஜயின் படம் பார்க்கும் நமக்கும் இது ஒரு நல்ல பாடம் !!
முதல் பாதி வறுத்தல் என்று சொல்லிவிட்டால் , இரண்டாம் பாதியினை என்னவென்று சொல்லதென்று தெரியவில்லை . விஜய் அறிமுகமாகும் பாடலில் , பாட்டாலும் , அவரது ஆட்டத்தாலும் சீட்டின் நுனிக்கு வரும் நாம் , அதன் பிறகு கதை செல்லும் போக்கில் , தியேட்டரின் வெளிப்புற வாசலுக்கே வந்துவிடுகிறோம் . என்ன செய்வது ? வித்தியாசமான கதையாயிற்றே !! ஸ்ரேயாவிற்காகவும் , பாடல்களுக்காகவும் பார்கலாம் . அதுவும் திருட்டுசிடி கிடைத்தால் மட்டுமே பார்ப்பதெற்கு சரிப்படும் . இல்லாவிட்டாலும் , இந்த புதுவருடத்தில் கட்டாயம் சின்னத்திரைகளில் " முதன்முறையாக " பார்க்கலாம் !!
மற்றபடி , இதனை பார்காதவர்கள் பாக்கியசாலிகள் . என்னைப் போல் பார்த்தவர்கள் , "செய்துவிட்ட பாவங்களுக்கான பிராயச்சித்தமாக " எண்ணிவிடுதல் உசிதம் !!
விஜயின் அடுத்த "வித்தையாசமான " படத்திற்காக காத்திருப்போம் !!!

மீண்டும் வருகிறேன் !!

Thursday, October 4, 2007

நினைக்காதிருக்க வேண்டிய நட்பு :

பள்ளிக்காலத்தில் எனக்கென்று சில நண்பர்கள் இருந்தார்கள் . குமாரசாமி, குமார் , அண்ணாமலை, முத்துப்பிரகாஶ் , ஸ்டிபன் போன்றோர் . இவர்களில்லாமல் நான் எங்கும் செல்வதில்லை . அண்ணாமலை எனக்கு நட்பினை போதித்தான் . ஸ்டீபன் பெயிலாகியதால் , என்னுடன் கூட வர இயலவில்லை . குமாரசாமி எனது ’குடி’த்தனத்தின் ஆசான் . முத்துப்பிரகாஶ் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை . குமாரை நான் கடைசியாக கண்டது அவனது ப்ளாஸ்டிக் கல்லூரியில் . இவ்வாறாக எனது பள்ளிக்கால தொடர்புகள் , பி எஸ் என் னலின் விரிவாக்கம் போல் பட்டும் படாமலும் இருக்கிறது . நான் கூற வந்த கூடாதிருந்திருக்க வேண்டிய நட்பு எனது கல்லூரிக் காலத்தானது .

கல்லூரிக்கு வந்தது முதலே நான் மிகுந்த கடுப்பும் , வெறுப்பும் கொண்டிருந்தேன் . நண்பர்களைப் பிரிந்ததும் , படித்த கல்லூரியினை விட்டதும், என்னவளை பார்க்க இயலாத இயலாமையும் எனக்குள் ஆறாத ரணமாகியிருந்தன .

கல்லூரியில் அறிமுகமானதும் சில வாரங்கள் கழித்து , " பேட்ஸ் " என்ற எங்களது கூட்டம் உருவாகியது . ஒன்றான மனநிலை கொண்ட அனைவரும் ஒருமித்து இருந்து , வழக்குண்டாக்கி , ’ஓட்டி ’ வாழ்ந்ததால் , இந்த பெயர் . இன்றும் ,நான் எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்வதென்றால் , அது எனது இந்த நட்பு வட்டாரமே!! . கவலையென்ற ஒன்றிறியாத , இருந்தாலும் காட்டிக்கொள்ளாத , வரும் இடரினையும் களிப்பாக்கி வென்று காணும் கூட்டம் , எனது நண்பர் கூட்டம் !!!

நாங்கள் மாதம் முதல் தேதிகளில் வாழ்வாங்கு இருந்ததும் உண்டு , மாதக்கடைசிகளில் வாழ்ந்து கெட்டதும் உண்டு . காதல் வெற்றிகளில் களிப்புற்றிருந்ததும் உண்டு , தோல்விகளில் அதனையும் வென்றிருந்ததும் உண்டு. ஒருவனின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வகையில் கொண்டாடியதும் உண்டு , காசில்லாது டீக்கடையில் அக்கவுண்ட்டில் வாங்கிய பிரட்டாலும் , டீயினாலும் அதனை சிறப்பித்ததும் உண்டு !!
ஒன்றாக இருந்தாலும் எங்களுக்குள் அவ்வப்பொழுது வேற்றுமைகள் இருக்கும் . தான் வாங்கிய விகடனை மற்றவன் படிப்பதில் ஆரம்பித்து , மற்றவனுக்கு முடி வெட்டி விளையாடும் அளவிற்கு சென்று , தனக்குப் பிடிக்காத பெண்ணிணை மற்றவன் விரும்புகிறானே !! , என்றளவிற்கு பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் என்றும் மற்றவர் முன் விட்டுக் கொடுத்ததில்லை , இனியும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை .

இப்படி அனைவரும் ஒன்றாக இருந்த வேளையில் எனக்கு மட்டும் ஒருவன் / இருவர் மேல் தனி பிரியம் . ஏன் என்று தெரியவில்லை , எப்படி என்று தெரியவில்லை . தானாக மற்றவன் மேல் ஒரு வித தனி பிரியம் . அவன் மேல் ஒரு வித தனிப் பற்றுதல் . அவனுக்காக , அல்லது அவனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ செய்த மனப்பிரயாசம் . இப்பொழுது நினைத்தால் , கேவலமாக இருக்கிறது . தன்னை உதாசினப்படுத்திய காதலியின் பின்னால் அலைவதையும் விட கொடுமையானதாகத் தோன்றுகிறது .

எனினும் வேலைக்காக வந்தேனோ அதோ விதிவசத்தால் வந்தேனோ , வெளிநாட்டுக்கு வந்தவுடன் , அந்த " உறவின் " தாக்கம் மெல்ல மெல்ல மட்டுப்பட தொடங்கியுள்ளது . அதனையே நானும் விரும்புகிறேன் . சில நேரங்களில் , குடும்பம் , நட்பு இதுயெல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு , சில வருடங்கள் தனிமையில் , மாதாமாதம் வீட்டிற்கு மட்டும் பணம் அனுப்பிக் கொண்டு வாழ்ந்தால் என்ன என்றும் தோன்றுகிறது . பிணைத்திருக்கும் பாசக் கயிறுகள் யாவற்றையும் அறுத்தேறிந்துவிட்டு வெளியேற வேண்டும் எனவும் தோன்றுகிறது . ஆனால் எனக்குத் தெரியும் , என்னால் இது மட்டும் கண்டிப்பாக முடியாதேன்பதை.மீண்டும் சந்திக்கும் பொழுதோ , சந்தித்தப்பின் கட்டித்தழுவும் அந்த வேளையிலோ , ஏற்கனவே மதில் மேல் பூனையாக இருக்கும் இந்த மனம் , அப்பக்கம் சாய்ந்துவிடுமோ என பயமாயிருக்கிறது . என்மீது எனக்கே பயமாயிருக்கிறதேன்பது மட்டும் உண்மை .

நாம் சிலரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் , அவர்களும் நம்மைப் பற்றி நினைப்பார்களா என்றேண்ணிப் பார்க்கிறது மனம் . அது தேவையில்லாதது என்று மற்றோர் மனம் சொல்கிறது . எது எப்படியிருந்தாலும் , நான் நானாக இருப்பதினை விட மேலானது வேறோன்றும் இல்லை என்பதை நம்புகிறேன்.

எஞ்சியிருக்கும் காலம் முழுதும் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் !!

மீண்டும் வருகிறேன் . !!!